ரோஹிணியா திருவோணமா ?

periyazhwar

 

பெரியாழ்வார் மற்றைய ஆழ்வார்களைக் காட்டிலும் கண்ணன் மீது பிரேமை கொண்டிருப்பவர். அதற்கு எடுத்துக்காட்டான “பல்லாண்டு பல்லாண்டு ” பதிகம் மிகவும் பிரபலமானது. அப்பாசுரத்தில், இப் பூவலகத்தில் தோன்றியதால், பெருமாளுக்கு எதுவும் குறை ஏற்படாமல் இருக்க பல்லாண்டு பாடினார்.

அதேபோல், வேறொரு பாசுரத்தில் அவனுக்கு பகைவர்களால் குறை ஏற்படாமல் இருக்க, கண்ணன் அவதரித்த நட்சத்திரத்தை மறைத்து பாடுகிறார்.

மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே முகிழ்நகையீர் வந்துகாணீரே

கண்ணன் ஆவணி மாத ரோஹிணி நட்சத்திரத்தில் அவதரித்தான். அதேபோல் பெருமானின் பொதுவான நட்சத்திரம் திருவோணம் என்பதும் உண்டு.இதில் அச்சுதனான கண்ணனின் வடிவழகை வர்ணிக்கும் போது “அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றியவன்” என்கிறார்.

ஹஸ்தத்தில் தொடங்கி அடுத்த பத்து நட்சத்திரங்கள் திருவோணமாகும். ஹஸ்தத்தில் இருந்து பின்னோக்கி பத்து நட்சத்திரங்கள் ரோஹிணி ஆகும். கலியுகத்தில் அவதரித்த பெரியாழ்வார், அவருக்கு பல்லாயிரம் ஆண்டுகள்முன் அவதரித்த கண்ணனின் நட்சத்திரத்தை வெளிப்படையாக சொன்னால் பகைவர்களால் ஏதேனும் கண்ணனுக்கு குறை ஏற்படுமோ என்று மறைத்து பாடுகிறார்.

இப்படி கண்ணன் மீதுள்ள பரிவாலே இருப்பதால் இவருக்கு பெரியாழ்வார் என்னும் பெயர்.

 

பகீரத பிரயர்த்தனம்

நாம் நம்மால் செய்வதற்கு அரிய காரியம் என்றால் அதை “பகீரத பிரயர்த்தனம்” பண்ணி செய்ய வேண்டும் என்போம். பகீரத பிரயர்த்தனம் என்றால் என்ன?அதற்கு என்ன பொருள் என்று பார்போம்.

“பகீரதன்” என்னும் அரசன் சூரிய குலத்தைச் சார்ந்தவன். தசரதனுக்கு முப்பாட்டன். கோசல நாட்டிற்கு அரசன். பகீரதனுக்கும் முன்னர் சாகரன் என்னும் அரசன் கோசல நாட்டை ஆண்டு வந்தவன். சாகரன் தனக்கு வெற்றிகிட்ட வேண்டும் என்பதற்காக அசுவமேத யாகம் செய்ய தொடங்கினான். யாகத்திற்கு பயன்படும் ஒரு வெள்ளை குதிரையை அரசன் தொலைத்துவிட்டான். அதை தேடுவதற்காக தன்னுடைய 60,000 பிள்ளைகளை நான்கு திசைகளிலும் அனுப்பினான்.

432px-Ganga_Mahabalipuram
பகீரதன் தவம் செய்யும் சிற்பம் – மால்லபுரம்

அக்குதிரை கபில முனிவர் அருகில் கட்டபட்டு இருந்ததை கோபமுற்ற இளவரசன், கபில முனிவர் தான் குதிரையை திருடிக்கொண்டுவந்தார் என்று தவறாக புரிந்துக்கொண்டு, அவரை தாக்கினான். இதனால் சினம் கொண்ட கபில முனி இளவரசர்களை சாம்பலாக போகுமாறு சபித்துவிட்டார்.

பிள்ளைகள் திரும்பிவராததால் அவர்களை கண்டுபிடிக்குமாறு தன் பேரன் அனுஷ்மனுக்கு சாகரன் உத்தரவிட்டார். இளவரசர்கள் சாம்பலான விஷயத்தை கேள்விப்பட்ட அனுஷ்மன், அவர்களை எப்படி மீட்க வேண்டும் என்று கபிலரிடம் பிரார்த்திக்க, அவர் சுவர்க்க லோகத்தில் உள்ள, கங்கை நதி இவர்கள் மேல் பட்டால் அவர்களுக்கு மோக்ஷம் உண்டு என்றார்.

சகாரனுக்கு பின்னால் வந்த சுமன், திலீபன் போன்ற அரசர்களால் கங்கை பூமிக்கு கொண்டு வர முடியவில்லை. இதனால் நாட்டில் அமைதி குறைந்துக் கொண்டே வந்தது. இக்காலத்தில் தான் பகீரதன் அரியணை ஏறினான். கங்கையை பூமிக்கு கொண்டுவராமல் வேறு எதுவும் செய்ய முடியாது என்றுப் புரிந்துகொண்ட பகீரதன், அரசை அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு, இமயமலைக்குச் சென்று தவம் செய்யத் தொடங்கினான்.

பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்தப் பின்னர், பிரம்மா அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். பகீரதன் கங்கை பூமியில் பாய வேண்டும் என்று கேட்டான். பிரம்மாவும் அவ்வரத்தை அருளினார்.

பூமியில் பாவம் செய்த பலர் வசிப்பதால், அவர்கள் சம்பந்தம் பெற்றால், அவர்களின் பாவம் தனக்கும் வந்துவிடும் என்று கங்கை பயந்தாள். அதற்கு பகீரதன் பூமியில் புண்ணியம் செய்தவர்கள் அதிகம் உண்டு. அவர்கள் சம்பந்தம் பெற்றால் கங்கையின் பாவம் போகும் என்றான். இதனால், தான் பூமிக்கு வருவதற்கு கங்கை ஒப்புக்கொண்டாள்.

பூமியில் பாவம் செய்தவர்கள் அதிகமாக உள்ளதால், கங்கை பாயும் வேகத்தை எதிர்கொள்ள முடியவில்லை. பூமிக்கு எதுவும் ஆபத்து வராமல் காக்க வேண்டும் என்று பகீரதன் பரமசிவனிடம் வேண்டினான். சிவன் கங்கையை தன தலையில் பட்டு சென்றால் ஆபத்து வராது என்றார். கங்கையும் அவ்வாறே சென்றாள். ஆனாலும் கங்கையின் வேகம் குறையவில்லை. கங்கை பாய்ந்த வேகத்தில் ஜுனு என்ற முனிவரின் ஆஸ்ரமத்தை அடித்துத் சென்றது. இதனால் கோபம் கொண்ட முனிவர், கங்கை முழுவதையும் அபோசனத்திற்காக (அபோசனம் என்பது இலையில் சாதத்தையும் நெய்யையும் சேர்த்த பின்னர் சேர்த்து கொள்ளும் நீர்) எடுத்துக் கொண்டார்.

பகீரதன் முனிவரிடம் வேண்ட, அவரும் கங்கையை விட்டார். இதனால் கங்கைக்கு ஜாஹன்வி என்ற பெயர் ஏற்பட்டது.

பகீரதன் தன தேரில் முன்னால் சென்று சாகரனின் 60,000 பிள்ளைகளின் சாம்பல் இருக்கும் இடத்தை வழி காட்ட அவ்விடத்தில் கங்கை பாய்ந்து மோக்ஷம் அளித்தாள். இவ்வாறு பலதிசைகளில் பாய்த்து கடைசியாக கடலில் கலந்தாள்.

பகீரதனும் பின்னர் நாடு திரும்பி நாட்டை பரிபாலனம் செய்தான். பகீரதன் பல சோதனைகைளை கடந்து கங்கையை பூமிக்கு கொண்டுவந்ததால் இதை பகீரத பிரயர்த்தனம் என்கிறோம்.

மதுரகவியாழ்வார் வரலாறு

மதுரகவியாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் 5வது ஆழ்வார் ஆவர்.இவர் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள திருக்கோளூர் என்னும் திவ்ய தேசத்தில் அவதரித்தார்.

  • மாதம் – சித்திரை
  • நட்சத்திரம் – சித்திரை
  • திவ்விய ப்ரபந்தம் – கண்ணிநுண்சிறுத்தாம்பு என்று தொடங்கும் பதினோரு பாசுரங்கள்.
மதுரகவி ஆழ்வார்
மதுரகவி ஆழ்வார்

மதுரகவியாழ்வார் திருமாலின் வாகனமான கருடனின் அம்சமாக அவதரித்தார். இவரது காலம் 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.

இவர் வேத சாத்திரங்களை நன்குக் கற்றவர். இவர் வடநாட்டு யாத்திரை மேற்கொண்டு இருந்தார். ஒருநாள் இரவு அயோத்தியில் பேரொளியைக் கண்டு வியப்படைந்தார்.அவ்வொளியை மறுநாளும் அவர் கண்டார். அவ்வொளி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்காக தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார். பூரி, அஹோபிலம், திருவேங்கடம் ஆகிய தேசங்களை தாண்டியும் அவ்வொளித் தெரிந்தது. மீண்டும் தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார்.கடைசியாக அந்த ஒளி, திருக்குருகூரில் மறைந்தது. ஆழ்வாரும் அவ்வூர் மக்களிடம், இவ்வூரில் ஏதேனும் அதிசயம் உள்ளதா என்று வினவ, அவ்வூர் மக்களும் இங்கு நம்மாழ்வார், ஒரு புளிய மரத்தடியில், யோக நிலையில் இருப்பதாகக் கூறினார்.

மதுரகவியாழ்வார் நம்மாழ்வர்க்கு உயிர் இருக்கிறதா என்று சோதிக்க அவர் மேல் ஓர் கல்லை எறிந்தார்.நம்மாழ்வார் முதன்முறையாக கண் திறந்துப் பார்த்தார். மதுரகவிகளும் இவர்க்கு உயிர் இருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டு, இவரால் பேச முடியுமா என்று பரிசோதிக்க-

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்? என்று கேட்டார்

அதற்கு நம்மாழ்வார், அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்றார்.

பதிலின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்ட மதுரகவிகள், நம்மாழ்வாரின் மேதாவிலாசத்தை புரிந்துக்கொண்டு அவரின் சீடரானார்.

இந்த வினா விடையில் இரு தத்துவம் புதைந்துள்ளது.

  1.  செத்ததின், அதாவது உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால், பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும்.
  2.  தன்னை பற்றிய அறிவு, பரமாத்வான திருமாலை பற்றிய அறிவற்ற ஜீவனுக்கு, பரமாத்மாவை பற்றிய அறிவு ஏற்பட்டால், அதைக்கொண்டே பக்தி வளரும்.

மதுரகவியாழ்வார் தன்னுடையப் பாசுரங்களில் திருமாலைத் தெய்வமாகப் பாடாது, நம்மாழ்வாரை தெய்வமாகப் பாடினார்.இவரது பாசுரங்கள் ஆச்சார்ய  பக்திக்கு எடுத்துக்காட்டாகும்.

மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் பாசுரங்களை பட்டோலைப் படுத்தினார். நம்மாழ்வார் திருவைகுண்டத்திற்கு சென்ற பிறகு தங்கத்தால் ஆன நம்மாழ்வாரின் விக்ரகம் கிடைத்தது.அவ்விக்ரகத்தை எழுதருளப்பண்ணிகொண்டு மதுரகவியாழ்வார் பல ஊர்களுக்கு சென்று நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்ல முடிவுசெய்தார்.

“வேதம் தமிழ்செய்த பெருமாள் வந்தார்,திருவாய்மொழிப்பெருமாள் வந்தார்,திருநகரிப்பெருமாள் வந்தார், திருவழுதிவளநாடர் வந்தார், திருக்குருகூர்நகர்நம்பி வந்தார், காரிமாறர் வந்தார், சடகோபர் வந்தார், பராங்குசர் வந்தார்”  என்று நம்மாழ்வாரின் பலவிருதுகளைப் பாடிக்கொண்டே மதுரகவியாழ்வார் மதுரையுள் சென்றார்.

அங்கே இருந்த சங்ககாலப் புலவர்கள், நம்மாழ்வாரின் பாடல்களை சங்கப்பலகையில் ஏற்றாமல், விருதுகளைப் பாடக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். அக்காலத்தில், சங்க பலகையில் பாடலை எற்றுவர்.பலகை அப்பாடலை கிழே தள்ளிவிட்டால், புலவர்கள் அப்பாடலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நம்மாழ்வார் எட்டு வரி, நான்கு வரி கொண்ட பாடல்கள் நிறையப் பாடியுள்ளார். அவற்றை விட்டு, இரெண்டே வரியுள்ள,

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
 என்னும் திருநாமம் திண்ணம் நாரணமே! (திருவாய்மொழி 10.5.1)

(கண்ணனின் திருவடிகளில் ஆசை உடையவர்கள், கண்ணின் திருநாமத்தை உச்சரித்துக்கொண்டே இருங்கள், அது கண்ணனையே காட்டும்.இது திண்ணம்)

என்ற பாடலை பலகையில் மதுரகவியாழ்வார் ஏற்றினார்.பலகை அப்பாடலைத் தள்ளாமல் ஏற்றுக்கொண்டது. நம்மாழ்வாரின் பெருமையை புரிந்துக்கொண்ட சங்ககாலப் புலவர்களும் தாம் செய்த தவற்றின் பரிகாரமாக நம்மாழ்வாரின் பெருமையை தாம் பாடலாக இயற்றினர்.

ஈயடுவதோ கருடற்கெதிரே இரவிர்கெதிர் மின்மினி ஆடுவதோ
 நாயாடுவதோ உறுமும்புலிமுன் நரி கேசரிமுன்நடையாடுவதோ
 பேயடுவதோ ஊர்வசிக்குமுன் பெருமானடிசேர் வகுளாபரணன்
 ஓராயிரமாமறையின் தமிழிற்ஒருசொற்பொறுமோ இவ்வுலகிற்கவியே

(இவ்வுலகில் உள்ள கவிகளே, பெரிய சிறகுகளை உடைய கருடன் முன் சிறிய ஈ ஆடுவதும், இரவின் முன் மின்மினி பூச்சிகள் ஆடுவதும், உறுமுகின்ற புலிமுன் நாய் ஆடுவதும், சிங்கத்தின் முன் நரி ஆடுவதும், அழகிற்சிறந்த ஊர்வசிமுன் பேயாடுவதும், வகுளமாலையத் தரிந்த நம்மாழ்வாரின் பாசுரங்கள் முன் தமிழில் உள்ள ஒரு சொல் சமமாகுமா! என்பது பொருள்)

இதில் வியப்பு என்ன வென்றால், அங்குக் கூடியிருந்த அனைத்து புலவர்களும் மேற்சொன்ன ஒரேப் பாடலை எழுதினர். இவ்வாறு மதுரகவியாழ்வார் மேலும் சிலகாலம் நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்லி அவரும் தம் பெரியவரான நம்மாழ்வாரின் திருவடியைச் சென்று சேர்த்தார்.

மதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை எடுத்துச்சொல்ல அவதரித்தவர். அதாவது, ஆச்சார்ய பக்தியும், பெருமானிடத்தில் உள்ள பக்தியும் படிக்கட்டுகளாக் கருதினால், பெருமான் மீது கொண்ட பக்தி என்பது முதல் படியாகும், ஆச்சார்ய பக்தி இரண்டாவதுப் படியாகும். ஒருவேளை பெருமானிடத்தில் உள்ள பக்தி குறைந்து அப் படிக்கட்டில்  இருந்து தவறினால், சம்சாரம் என்னும் கடலில் விழுந்து விடுவோம். ஆச்சார்ய பக்தி என்னும் படியில் இருந்து தவறினால், அடுத்தப்படியான பெருமானின் மீது கொண்ட பக்தி காப்பாற்றி விடும்.

திருமழிசையாழ்வார் வரலாறு

திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் 4-வது ஆழ்வார்.இவர் சென்னைக்கு அருகில் உள்ள திருமழிசை என்ற ஊரில் அவதரித்தவர்.

  • மாதம் – தை
  • நட்சத்திரம் – மகம்
  • திவ்விய ப்ரபந்தம் – நான்முகன் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம்.
திருமழிசையாழ்வார்
திருமழிசையாழ்வார்

இவர் திருமாலின் சக்கராயுதத்தின் அம்சமாக அவதரித்தார்.

திருமழிசையில் பார்கவர் என்பவர் யாகம் புரிகையில் அவரது மனைவி கனகாங்கிக்கு தலை,கை,கால் உள்ளிட்ட உறுப்புகளின்றி ஓர் பிண்டமாக அவதரித்தார். இதனால் மனம் வருந்தி பெற்றோர், பிண்டத்தை ஒரு பிரம்புதூற்றின் அடியில் விட்டுச் சென்றனர். பின்னர் திருமகளின் அருளால், எல்லா அவயவங்கள் பெற்று ஒரு குழந்தையானார்.பின்னர், திருவாளன் என்பவன் பிரம்பு அறுக்க போனவிடத்தில் குழந்தை அழுகுரலைக் கேட்டு, அதை எடுத்துக்கொண்டு வந்து தமது மனைவி, பங்கயச்செல்வியுடன் சேர்ந்து வளர்த்தார்.அக்குழந்தைக்கு, பசி, துக்கமின்றி இருந்தும் உடல் சிறிதும் தளரவில்லை.

இந்த ஆச்சர்யத்தை கேள்வியுற்று அருகில் இருந்த சிற்றூரில் இருந்து வந்த வயதான தம்பதியர் பால் கொடுத்தனர்.அவர்களின் அன்பின் மிகுதியால் குழந்தை பால் குடிக்கத் தொடங்கியது.சிறிதுகாலம் கழித்து, தனக்கு பால் கொடுத்த தம்பதியருக்கு கைம்மாறு பொருட்டு, தனக்கு கொடுத்தப் பாலில் மீதியை உண்ணுமாறு செய்தார்.அவ்வாறு உண்டபின் அவர்களுக்கு இளமை திரும்பியது.அவர்களுக்கு கணிகண்ணன் என்ற குழந்தை பிறந்தது.கணிகண்ணன் பின்னர் திருமழிசையாழ்வார் சீடரானார்.

இவர் சமணம், சாக்கியம், சைவம் முதலிய மதங்களை கற்று பின்னர் வைணவத்திற்கு வந்தார். இதை,இவரே பாடினார்-

சாக்கியம் கற்றோம், சமணம் கற்றோம், சங்கரனார் ஆக்கிய ஆகமநூல்
ஆராய்ந்தோம்; பாக்கியத்தால் வெங்கட்கரியனை சேர்ந்தோம்

இவர் சிவவாக்கியர் என்ற பெயரில் சைவத்தை முதலில் பின்பற்றி பின்னர் வைணவம் தழுவினார் என்ற வரலாறும் உண்டு.

திருமழிசையாழ்வாரும் சொன்னவண்ணம் செய்த பெருமாளும்

தமது சீடர் கணிகண்ணனுடன் சேர்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள திருவெக்காவில் உள்ள திருமாலுக்கு தொண்டு செய்துவந்தார்.அவர்கள் குடிலை சுத்தம் செய்து வரும் வயதான கிழவிக்கு தன யோகப்பலதாலே அனுக்ரக்ஹிக்க விரும்பினார்.கிழவிக்கு என்ன வரம் வேண்டும்மென கேட்க, அவளும் தன் வயது முதிர்வினால் ஏற்பட்ட இயலாமையை நீக்குமாறு கேட்க, ஆழ்வார் எப்போதும் இளமையாக இருக்கும்படி வரம் கொடுத்தார்.பல காலம் சென்றாலும் இளமைக்குன்றாத அப்பெண்ணின் அழகில் மயங்கிய காஞ்சியை ஆண்ட பல்லவராயன் அவளைத் திருமணம் செய்துகொண்டான்.பலகாலம் சென்றாலும் தன் மனைவியின் மாறாததை கண்டு வியப்புற்ற அரசன் மனைவியிடம் வினவினான்.அவள் ஆழ்வாரின் பெருமையை எடுத்துச் சொல்ல தனக்கும் இளமை கிடைக்க வேண்டும் என்று கணிகண்ணனிடம் சொல்ல ஆழ்வார் அவ்வாறு செய்ய மாட்டார் என்று பதிலளிக்க, குறைந்தபட்சம் தன்னைப் பற்றி கவிதை பாடுமாறு சொல்ல, ‘அவர் நாராயணனையன்றி எந்த நரனையும் பாடேன்‘ என்று சொல்ல, இதைக் கேட்டு, கோபமுற்ற அரசன், கணிகண்ணை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.இதைக் கேள்வியுற்ற ஆழ்வார், தானும் நாட்டை விட்டு செல்வதாக முடிவுசெய்து, யதொக்தகாரி பெருமானிடம்-

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்

என்று பாடினார்.
(கணிகண்ணைன் செல்கின்றான், நானும் செல்கிறேன், கச்சியில் இருக்கும் பெருமானே, நீயும் இங்கு இருக்காவேண்டாம்.நீ அதிசேஷனாகிய உன்னுடைய பாயைச் சுருட்டிக்கொண்டு எங்களுடன் கிளம்பி வா என்று விண்ணப்பித்தார்.)

பெருமானும் அவ்வாறு சென்றார்.அவர்கள் ஒருநாள் இரவு தங்கியிருந்த இடம் “ஓர் இரவு இருக்கை” என்று அழைக்கப்பட்டு, அப்பெயர் மருவி “ஓரிக்கை” என்று இப்போது வழங்கப்படுகிறது. இவ்விஷயத்தை கேள்வியுற்ற அரசன், தான் செய்த தவறை மன்னிக்குமாறு வேண்டி, நாடு திரும்ப வேண்டிக்கொண்டார்.திருமழிசையாழ்வாரும் திருமாலை நோக்கி-

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.

(கணிகண்ணைன் திரும்புகிறான், நானும் திரும்புகிறான், கச்சியிப் பெருமானே, நீயும் அதிசேஷனாகிய உன்னுடைய பாயைச் விரித்து படுத்துக்கொள்ள எங்களுடன் கிளம்பி வா என்று விண்ணப்பித்தார்.)

என்று வேண்ட திருமாலும் திரும்பினார்.ஆழ்வார் சொன்னபடி செய்தமையால், பெருமானுக்கு “சொன்னவண்ணம் செய்த பெருமான்” என்ற பெயர் பெற்றார்.

திருக்குடந்தையில் திருமழிசையாழ்வார்

கும்பகோணம் சென்று ஆராவமுதனை தரிசிக்கச் சென்றார்.பெரும்புலியூர் என்னும் கிராமத்தில் ஒரு வீட்டின் திண்ணையில் சென்று அமர்தார்.அங்கு வேதம் ஓதிக்கொண்டிருந்த சில பிராமணர்கள், ஆழ்வார் வேதத்தை கேட்க தகுதியற்றவர் என்று கருதி ஓதுவதை நிறுத்தினர்.இதைப் புரிந்துக்கொண்ட ஆழ்வார் அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.அதன்பின்,பிராமணர்கள் தாங்கள் விட்டவிடத்தை மறந்தனர்.ஆழ்வார் ஒரு கருப்பு நெல்லைக் நகத்தால் கீறி வேத வாக்கியத்தை குறிப்பாலே உணர்த்தினார்.”கிருஷ்ணனாம் வ்ரீஹிணாம்நகநிர்பிந்நம்
என்ற ஞாபகம் வர, ஆழ்வாரிடத்தில் மன்னிப்பு வேண்டினர்.

ஆழ்வாரின் பெருமையறிந்த சிலர், அவரை அங்கு நடந்த யாகசாலைக்கு அழைத்துசென்று மரியாதை செய்தனர்.யாகசாலையில் இருந்த சிலர், இவர் வருங்கயைப் பொறுக்கவில்லை. இதனால் கோபமுற்ற ஆழ்வார் தன்னுள் அந்தர்யாமியாய் இருக்கும் கண்ணனை இவர்களுக்கு காட்டுமாறு பாடினார்-

அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது என்கொலோ
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்கவல்லையேல்
சக்கரம் கோல்கையனே சதங்கர் வாய் அடங்கிட
உட் கிடந்தவண்ணமே புறம் பொசிந்து காட்டிடே

(இவர்கள் அறியாமையை போக்குவதற்கு பயன்படாமல் இருக்கும் உன் கைககள் எதற்கு.சக்கரத்தை ஆயுதமாக கொண்ட திருமாலே, நீ கிடக்கும் கோலத்தை என்னுளே தோன்றி உன்னை இவர்களுக்கு காட்டு)

பெருமானும் இவருள்ளே தோன்றி அவர்களுக்கு தன்னைக் காட்டினார்.

ஆராவமுதனை சென்று சேவித்த அவர், பக்தியால் பாடினார்-

நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்கு ஞால மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ விலங்கு மால் வரைக்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரை குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே (திருச்சந்த விருத்தம்-61)
குடந்தை ஆராவமுதன்
குடந்தை ஆராவமுதன்

இப்பாடலில் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு எனப் பாடியபோது, ஆராவமுதன் தன் சயன கோலத்தை விட்டு எழுந்திருக்க, பதறிய ஆழ்வார், “வாழி கேசனே” என்று பாடினார்.அவர் சொன்னதை தட்டாமல், பெருமான் அப்படியே இருந்தார்.இக்கோலத்தை இன்றும் இக்கோயிலில் சேவிக்கலாம்.

பிறப் பெயர்கள்

  • பக்திசாரர்
  • உறையில் இடாதவர் – வாளினை உறையில் இடாத வீரன் எனும் பொருள்பட (இங்கு ஆழ்வாரின் நா வாள் எனப்படுகிறது)
  • திருமழிசைபிரான்

இவர் நிறைய திவ்யபிரபந்தங்கள் எழுதிக் காவிரியில் விட்டார். அவற்றுள் நான்முகன் திருவந்தாதியும், திருச்சந்தவிருத்தமும் திரும்ப வந்தது.இவரது காலம் 7ஆம் நூற்றாண்டு.திருமழிசையாழ்வார் தன் யோகபலத்தால் 2300 வருடங்கள் இவ்வுலகில் வாழ்ந்தார்.

முதலாழ்வார்கள் வரலாறு

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார்
பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்தில் உள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலில்(திருவெக்கா)உள்ள பொய்கையில்(குளம்)அவதரித்தார்.

  • மாதம் – ஐப்பசி
  • நட்சத்திரம் – திருவோணம்
  • திவ்விய ப்ரபந்தம் – முதல் திருவந்தாதி

இவர் திருமாலின் ஆயுதமாகிய பாஞ்சச்சன்னியத்தின் அம்சமாக தோன்றினார். இவர் காலம் 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள.

பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார்
பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோயில் அருகில் அவதரித்தார்.

  • மாதம் – ஐப்பசி
  • நட்சத்திரம் – அவிட்டம்
  • திவ்விய ப்ரபந்தம் – இரண்டாம் திருவந்தாதி

இவர் திருமாலின் ஆயுதமாகிய கொளமேதகியின்(கதை)அம்சமாக தோன்றினார். இவர் காலம் 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

பேயாழ்வார்

பூதத்தாழ்வார்
பேயாழ்வார்

பேயாழ்வார் சென்னையையில் உள்ள திருமயிலையில்(மயிலாப்பூர்) அவதரித்தார்.

  • மாதம் – ஐப்பசி
  • நட்சத்திரம் – சதயம்
  • திவ்விய ப்ரபந்தம் – மூன்றாம் திருவந்தாதி

இவர் திருமாலின் ஆயுதமாகிய நாந்தகம்(வாள்)அம்சமாக தோன்றினார். இவர் காலம் 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் சம காலத்தவர்கள்.இவர்கள் மூவரும் முதலாழ்வார்கள் ஆவர்.

முன்னொரு காலத்தில் ஒருநாள் பலத்த மழை பெய்ய, பொய்கையாழ்வார் ஒரு குடிசையில் உள்ள இடைகழியில் மழைக்காக ஒதுங்கினார்.அவ்விடத்தில், ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம். சிறிது நேரம் கழித்தது, பூதத்தாழ்வார் நுழைந்தார். பின்னர், பேயாழ்வாரும் அங்கு நுழைந்தார்.சிறிது நேரம் கழித்து, அவர்கள் மூவரையும், நான்காவதாக ஒருவர் நெருக்குவதுப் போல் இருந்தது.

நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், அவர்கள் பாசுரங்கள் மூலம் விளக்கேற்றினர்.பொய்கையார்,

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சுட்டினேன் சொல் மாலை
இடராழி நிங்குகவே என்று (முதல் திருவந்தாதி -1)

(கடலினால் சூழ்ந்த இவ்வுலகை அகழியாக கொண்டு, கடலை நெய்யாகக் கொண்டு,கதிரவனை திரியாகக் கொண்டு விளக்கை ஏற்றி திருமாலின் திருவடிக்கு பாசுரங்களை மாலையாகச் சூட்டினேன்.)

அடுத்து பூதத்தாழ்வார்-

அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானச் தமிழ் புரிந்த நான்  (இரண்டாம் திருவந்தாதி -1)

(அன்பை அகழியாகக் கொண்டு, ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு, அறிவை திரியாகக் கொண்டு திருமாலுக்கு விளக்கேற்றினேன்)

பேயாழ்வார்-

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று (மூன்றாம் திருவந்தத்தி -1)

என்றுப் பாடினார்.

(இவர்கள் ஏற்றிய விளக்கில், மூன்றாவது ஆழ்வார் பரம்பொருளாகிய திருமாலை கண்டனர்).

நெருக்கத்தின் காரணம், திருமாலே என்று உணர்தனர். முதலாழ்வார்கள் மூவரும் திருமாலின் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் நிலையில் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தனர்.

ஆழ்வார்கள் – ஓர் அறிமுகம்

ஆழ்வார் என்பதற்கு பகவத் பக்தியில் ஆழ்ந்து இருப்பவர் என்று பொருள். அவர்கள் தென்னாட்டில் வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு இடங்களில் அவதரித்தவர்கள்.ஆழ்வார்கள் பன்னிருவர்-

  1. பொய்கையாழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசையாழ்வார்
  5. மதுரகவியாழ்வார்
  6. நம்மாழ்வார்
  7. குலசேகராழ்வார்
  8. பெரியாழ்வார்
  9. ஆண்டாள்
  10. தொண்டரடிப்பொடியாழ்வார்
  11. திருப்பாணாழ்வார்
  12. திருமங்கையாழ்வார்

ஆழ்வார்கள்

இவர்களில் மதுரகவியாழ்வார், ஆண்டாளைத் தவிர்த்து ஆழ்வார்கள் பதின்மர் என்று கூறும் வழக்கமும் உண்டு.இவர்கள் அனைவரையும் “சொன்னதைச் சொல்லும் ஏக கண்டர்கள்” என்பர்.அதாவது, இவர்கள் வெவ்வேறு உடல் கொண்டவர்கள் ஆனாலும் ஒரே குரலில், திருமாலே முழுமுதற்கடவுள் என்பதை சொல்வதற்காக அவதரித்தவர்கள்.இவர்கள் அருளிய பாசுரங்களை நாலாயிர திவ்ய ப்ரபந்தம் அல்லது அருளிச்செயல் என்பதாகும். அருளிச்செயல் வடமொழி வேதத்திற்கு இணையாகக் கருதப்படுகிறது. அருளிச்செயலின் பெருமை பற்றிக் கூறும் போது சுவாமி தேசிகன் “தெளியாத மறை நிலங்கள் ஓதித் தெளிகின்றோமே” என்கின்றார். அதாவது, புரிந்துக்கொள்வதற்கு கடினமான நான்கு வேதங்களை திவ்யப்பிரபந்தம் கொண்டு தெரிந்துக்கொள்கிறோம் என்கிறார்.

இவர்களால் பாடப்பெற்ற தலங்களே திவ்யதேசங்கள் ஆகும்.அவை 108.

இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் விரிவாக அடுத்தடுத்தக்  கட்டுரைகளில் பார்க்கலாம்.